Skip to main content

முந்தி வந்த வசந்தகாலம்

வழக்கத்திற்கு மாறான அமைதி. குழந்தைகள் என்றாலும் எனது உணர்வை புரிந்திருந்தது போல் எனக்குத் தெரிந்தது.  வண்டி ஏறும்முன் நடந்த நிகழ்வுகளை அவர்களும் பார்த்திருந்தனர். அமைதி வண்டிக்குள் மட்டுமல்ல. வெளியேயும் அன்று மேகமும் அமைதியாகவே இருந்தது. அது தனது பரந்து விரிந்த தன்மையால் சூரியனின் ஒளிவீச்சை மறைத்திருந்தது.

“நீ காற்று நான் மரம். என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் “ என்று நம் மூதாதையர்கள் சொன்னதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு தலையாட்டி பொம்மையாகவே வாழ வேண்டும் எனவே நினைக்கிறேன்.   ஆனால் என்னை மீறி சில நேரங்களில் மாறி நடந்து விடுகிறது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் போது காரில் ஏறியவுடன் மூளையைக் கழற்றி வை என்று அறிவுக்கு தினமும் சொல்லிவைப்பேன். அதுவும் வெள்ளிக்கிழமை சாயங்காலம் ரொம்ப கறாராக பலமுறை சொல்லிக்கொள்வேன். அதை ஒரு மந்திரம் மாதிரி வீட்டில் இருக்கும் எல்லா நேரங்களிலும் சொல்லிக்கொண்டே இருப்பேன்.

அதுவும் அவளோட ஏதாவது சண்டை போட்டு சமாதானம் ஆன பிறகு ரெண்டு மூணு வாரம் “ஆமாம்மா. சரி தான் “ என்ற ராகமே இசைப்பேன். பத்து வருட வாழ்க்கை. . என்னோட ஒவ்வொரு அசைவுக்கும் என்ன காரணம்னு தெளிவாக தெரிந்து வைத்திருப்பாள். அவளுக்கோ ஆமாம் சாமி போட்டால் ஏதோ ஒரு பிடிப்பு இல்லாமல் இருப்பது போன்ற நிலை.

“கல்யாணங்கறது ரெண்டு பேரும் கூடி முடிவு பண்றது. அவனோட கருத்தும் முக்கியம்” என்று எண்ணியோ, “எல்லா விசயத்துக்கும் தலையாட்டுறானே. பாவமா இருக்கே. இந்த முறை அவன் உண்மையா என்ன நினைக்கான்னு கேட்போம் “ என்ற பச்சாதாபத்தாலோ , பத்து வருச வாழ்க்கையில் என்னைப் பிடித்து காதல் கொண்டு என்னை   ஈர்க்க என் கருத்தைக் கேட்டு அது படி செய்யலாம்னு நினைத்தோ நான் உண்மையாக என்ன நினைக்கிறேன் என்பதை தெரிந்து கொள்ள முயல்வாள்.

துவக்கத்தில் அறிவு நன்கு விழித்திருக்கும். எதுக்கு வீண் வம்பு என்று யோசித்து பல முறை நழுவி வழுவி   “பட்டத்து ராணியே! நீங்கள் சொல்வதே மிகச்சரியான யோசனை. அதுவே வெல்லும். ஓங்குக உன் புகழ்” என்றே பாடுவேன். இருவருக்கும் இணக்கமான நிலை அதிகரிக்க அதிகரிக்க என் கருத்தைச் சொன்னால் பழுது இல்லை என்ற நம்பிக்கை வரும். இது போன்று இரண்டு மூன்று வாரங்கள் கழியும். நான் சொல்லும் சில யோசனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பாள். சிலவற்றை நிராகரிப்பாள்.

பரிமாறப்பட்ட அன்பு கொடுத்த தைரியம் விரும்பியதைக் கேட்கச் சொல்லும். மனதில் பட்டதைச் சொல்லச்  சொல்லும். இந்த உல்லாலாலா ஒரு யோக நிலை. கடந்த காலக் கசப்புகளை அறவே மறந்த நிலை. தெரிந்ததெல்லாம் அக்கணம் மட்டுமே. மணல்முழுதும் இன்று சர்க்கரையா?
கடல்முழுதும் இன்று குடிநீரா?  என்று மனம் காற்றாய்ப் பறக்கும். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் காரில் பாட்டின் சத்தம் சிக்னலில் நிற்கும் பக்கத்து காரில் உள்ளவரைத் திரும்பிப் பார்க்கச் செய்யும். நான் போகும் லேனில் நுழைய எத்தனிக்கும் பக்கத்து லேன் கார்களுக்கு எளிதில் வழி கிடைக்கும். குதூகலம் பல வாரங்களாக மனத்தை ஆக்கிரமித்து இருக்கும் பய உணர்வுகளை காணாமல் போகச்செய்யும். முகமெல்லாம் புன்னகை. கண்களில் அபார நம்பிக்கை. ஆனால் உண்மை எதுவெனில் முடிவற்ற சந்தோசம் என்ற வரத்தை இயற்கை எந்த ஒருவருக்கும் வழங்கிய வரலாறு இல்லை.

பெல் ரோட்டிற்கு இடது பக்கம் திரும்புவதற்கு மெக்கினிஸ் பெர்ரி சந்திப்பில் ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை கொக்கு காத்திருப்பது போல்  காத்திருந்தேன். அப்போது மூன்று வயது பெண் குழந்தை முகத்தை தீவிர வருத்தத்துடன் வைத்துக் கொண்டு “ அம்மா உன்னத் திட்டினாளா? “ ன்னு காரில் நிலவிய அமைதியை உடைத்தாள். நல்ல இடைவெளி கிடைத்ததால் வண்டியை இடதுபுறம் திருப்பி பெல் ரோட்டில் திரும்பினேன்.

இந்த ஊருக்கு வந்த புதிதில் சனிக்கிழமை காலை இந்த ரோட்டை ஒட்டிய திடலில் கிரிக்கெட் விளையாட சேர்ந்து வருவோம். அடர்ந்த மரங்கள் நெருக்கமாக உயரமாக இருபுறமும் வளர்ந்திருப்பதை அதிசயித்துப் பார்ப்பேன். வெயில் காலத்தில் சாலையின் இருபுறத்து மரங்கள்  வளர்ந்து வளைந்து சாலையில் நிழல்களைப் பரப்பி வாகனங்களை வரவேற்றுக் கொண்டிருக்கும். அந்த வளைவுக்குள் காரில் நுழைவது ஒரு குறுங்காட்டிற்குள் நுழைவது போன்ற உணர்வு. மரங்களின் அடிமரத்தில் பசுங்கொடிகள் படர்ந்து மரத்தண்டை முழுதும் மறைத்திருக்கும். குளுமையும் ஈரமும் வசீகரித்துக்கொணெடிருக்கும். செப்டம்பர் மாதத்தில்  இலைகள் மூத்து ஆரஞ்சு, மஞ்சள், பழுப்பு, சிவப்பு என பல வண்ணக்கலவைகளில் மூப்பின் அழகை அசைத்துக் கொண்டிருக்கும்.

என்றாவது ஒருநாள் என் மனைவியை கூப்பிட்டு வந்து இந்த அழகை ரசிக்கச் சொல்லி நான் அவளை ரசிக்க வேண்டும் என்று பலநாட்கள் சிந்தித்து இந்தச் சாலையைக் கடப்பேன்.  ஆறு வருடங்கள் ஆகியும் நடந்ததில்லை. வெகுகாலம் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி இருந்தோம். உண்மையான ஆசை தன்னைத் தானே நிறைவேற்றிக்கொள்ளும். சமீபத்தில் இந்தத் தெருவின் அருகாமையில் தான் நாங்கள்   வீடு வாங்கியிருந்தோம். அதன்பின் இந்தச் சாலையில் நள்ளிரவுகளில் விளக்கொளியில் பழுத்த மேப்பிள் இலைகள் அசைந்து தரையிரங்குவதை ஒன்றாகப் பார்த்திருக்கிறோம். காரில் கடக்கும் போது சக்குரா மொட்டுகள் மரக்குச்சிகளில் விடுமுறை விளக்குகளாய் ஒட்டிக்கொண்டிருப்பதை, வெள்ளை, இளங்சிவப்பு, பச்சை என வண்ணங்களில் மெதுவாக மலர்வதை, பின்னர் இலைகள் முளைக்கும் முன் பூத்துக் குலுங்குவதை, நிறைந்த பூக்களுக்கு மத்தியில் அங்கொன்றும் இங்கொன்றும் தளிர்த்திருக்கும் இலைகளை, மழையில் அவை அடிக்கப்பட்டு தரையெங்கும் முடியாத கோலத்தின் புள்ளிகளாய் விழுந்து கிடப்பதை குடும்பத்துடன் பார்த்திருக்கிறோம்.

இந்தத் தெருவில் தான் குழந்தைகளின் பள்ளிகள், கராத்தே வகுப்புகள் மற்றும் நண்பனின் வீடு என இருக்கின்றன. இப்போதெல்லாம் வாரத்தின் சில நாட்களில் அவள் ஐந்தாறு முறைகள் இந்தத் தெருவில் குழந்தைகளை அங்கும் இங்கும் கொண்டு செல்கிறாள். சில நாட்கள் எங்கள் வீட்டில் விளையாடும் நண்பனின் குழந்தைகளையும் அவர்கள் வீட்டில் கொண்டு விடச் செல்வாள். ஒவ்வொரு மரமும் அவள் ஒவ்வொரு முறை கடக்கும்போதும் அவளைப் பார்த்து நெடுநாள் நண்பரைப் பார்ப்பது போல் சிநேகத்துடன் கையசைக்கும். இங்கே மான்  கடந்து செல்லும் என்பதைத் தெருவின் ஒருபுறம் மான் படம் வரைந்த அறிவிப்புப் பலகை உணர்த்திக்கொண்டிருந்தது.

வெளியே மரங்கள் இன்னும் குச்சி குச்சியாகவே இருந்தன. வானம் இன்னும் பச்சையை பூமிக்கு அனுப்பியிராத பிப்ரவரி.  இந்தத் தெரு இதன் வழியாக கடக்கும் வாகனங்களை அரை நிர்வாண கோலத்தில் அமர்ந்து அமைதியாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. குச்சிகளின் இடுக்கு வழியாக மரங்களின் இடைவெளி வழியாக தெருவின் பல பணக்கார வீடுகளைப் பார்க்க முடிகிறது. ஒரு மூன்று மாதம் மட்டும் தான் அந்த வீடுகளின் ஒய்யாரங்களை பார்க்கமுடியும்.

என் பொன்னு கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை. காலையில் நடந்த நீண்ட விவாதத்தை மூன்று வயதுக்கு சொல்லவா வேண்டாமா என்ற தீவிர யோசனை. அடுத்த கேள்வியை “ஏன் திட்டினா” என்று அதே பாவனையில் தொடர்ந்தாள். நடந்த நிகழ்வுகளை இவளுக்கு புரியும் வகையில் எப்படிச் சொல்வது என்று யோசித்து “ பாத்ரூமில் தண்ணீ வெளிய வருதுல்ல ன்னு என்ட கேட்டா. எனக்குத் தெரியலன்னு சொன்னேன். இது கூட புரியாதான்னு திட்டினா. * என்று சுருக்கி பதில் சொன்னேன்.

அவளுக்கு என்ன புரிந்தது என்று தெரியவில்லை. எனக்கு அவளின் நீண்ட சிரிப்பொலி மட்டும் கேட்டது. கண்டிப்பாக கண்களை மூடியிருப்பாள். உதடுகளையும் உருட்டி குவித்திருப்பாள். அவள் கண்களை மூடி சிரிப்பது ஒரு பேரழகு. “நேத்து பேண்ட்ல உச்சா போயிட்டேன். அம்மா என்ன திட்டினா.
நான் அழுதுட்டேன் “ ன்னு அதே சிரிப்பில் தொடர்ந்தாள். முந்திய இரவு அவள் அழுது நடத்திய ஆர்ப்பாட்டங்களை ஒரு தருணம் நினைத்துக்கொண்டேன். என்னை அப்படி அழுகச் சொல்கிறாளா என்று நினைத்து நான் என் மனைவி முன்னால் அழுவதாக கற்பனை செய்து பார்த்தேன். முகத்தில் எளிய புன்னகை கடந்து இறுக்கம் தளர ஆரம்பித்தது.

பாத்ரூமில் இருந்து வெளியே தண்ணீர் மெதுவாக கசிந்து நாளடைவில் பாத்ரூமின் வெளிப்பக்கச் சுவர்களில் ஈரமேறி பழுப்பேறிக் கொண்டிருந்தது. ஒரு நாள் இதற்கு நேர் கீழ் உள்ள கராஜின் கூரைப்பகுதியில் இருந்து தண்ணீர் சொட்ட ஆரம்பித்தது. ஆள் கூட்டி வந்து பழுது பார்த்த பின்னரும் கசிவதாகச் சொன்னாள். எனக்கோ இன்னும் கசிகிறதா இல்லையா என்று தெரியவில்லை. நான் எந்தப் பக்கம் கசிகிறது என்று கேட்டதற்கு அவள் சொன்ன பல அடையாளங்களை என் மூளை கிரகிக்க முயன்று தோற்றது. இது முதன்முறையன்று. அவளுக்கோ கோபம் தலைக்கேறி “இது கூட புரியலியா? “ என்று கேட்டு சண்டை ஆரம்பித்தது. காலை நூலகத்திற்கு கிளம்ப ஆரம்பிக்கும் முன் நடந்த வாதத்திற்கு இதுதான் பின்புலம். உணர்ச்சி அறிவை மிஞ்சிய காலை. எந்திரமாக இருந்திருந்தால் உணர்ச்சிவசப்படாமல் வேலை செய்ய முடியும்.  இப்போதெல்லாம் எந்திரங்களும் எப்படி உணர்ச்சிவசப்படுவது என்பதைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளன. பொதுவாக குழந்தைகள் வெளியே கிளம்பும் போது வீட்டிற்கு வெளியே வந்து குழந்தைகளுக்கு பை சொல்லி வழியனுப்பி வைப்பாள். இன்று கதவைக் கூட மூட வரவில்லை.

எட்டு வயது பையன் இன்னும் அவன் கருத்தை காரில் தெரிவிக்காமல் விலகியே இருந்தான். அவனை “அம்மா திட்டினா என்னடா பண்ணனும்டா “ ன்னு நேராகவே கேட்டேன். அவள் குறுக்கீட்டு “நான் அழுதுடுவேன் “ ன்னு அவள் கருத்தை அதே சிரிப்புடன் பதிவு செய்தாள். அவனிடம் நான் மீண்டும் கேட்டபோது “ அக்ட் லைக் நத்திங் ஹேப்பன்ட்” ன்னு உணர்ச்சிகள் ஏதுமின்றி பதிலளித்தான். “ டேய்.. அம்மா திட்டிட்டு இருக்கறப்ப ஒரு பதிலும் பேசாம இருந்தா அவளுக்கு இன்னும்தான்டா கோவம் வரும் “  ன்னு நான் திருப்பிக் கேட்ட பிறகு அவள் மீண்டும் குறுக்கீட்டு “நான் அழுதுடுவேன் “ ன்னு சிரித்தாள். அவனோ “கோ அன்ட் ஸ்லீப் வித்தவுட் திங்கிங் எனித்திங் “ என்று அவன் யோசனையைச் சொன்னான். சிறிது நேரம் கழித்து “ ஆர் ரீட் அ புக். யு வில் ஃபர்கட் “ ன்னு முடித்தான். எந்த யோசனையும் எனக்குப் பயன்பெறாது.
எனக்கு கேட்கும் சொற்களை கிரகித்து அதை மூளைக்குள் படமாகக் கொண்டு செல்வது அவ்வளவு எளிதானதன்று. குளியலறை சென்று அதன் முன் நின்று “இதோ“ என்று சொல்லியிருந்தால் விளங்கியிருக்கும். சிறுகதையில் நாவலில் விளக்க வரும் சில சூழ்நிலைகள் எளிதாக புரியாது. அந்தப் பத்தியை நான்கைந்து முறை வாசித்த பிறகு தெளிய ஆரம்பிக்கும். ஆனால் அவளிடம் புரிவதற்காக திருப்பி திருப்பிக் கேள்விகள் கேட்டால் கோவம் வரும். இந்த இரண்டு பிறவிக்குணங்கள் பலமுறை கூண்டில் ஏறி தனக்காக வாதிட்டும் கறுப்புக் கந்தல் துணியைக் கண்ணில் கட்டி பிரதிவாதிக்கு தீர்ப்பளித்தும் வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் மாறி மாறி அவதாரம் எடுத்த தருணங்கள் பல.  

இனி வரும் வாரங்களில் பகல்ல என்ன பண்ணுன? பிள்ளைங்க என்ன சாப்பிட்டுச்சு? கோவிலுக்கு போவோமா ன்னு எந்தக் கேள்வி கேட்டாலும் மௌனம் மட்டுமே பதிலாக வரும். சாப்பாடு எப்போது ரெடியானது என்று தெரியாது. அடுப்பின் அருகே ஏதாவது ரெடியாக இருந்தால் போய் எடுத்து சாப்பிட வேண்டியதுதான். உப்புமா சாப்பிடும் போது சட்டினி அரைத்திந்திருப்பது தெரியாமல் உப்புமா மட்டும் சாப்பிட்டுருப்பேன். சாதமாக இருந்தால் பொறியல் கண்ணில் தெரிந்திருக்காது. தேடி சாப்பிடும் பொறுமையை அரைகுறை ஆணவம் அனுமதிக்காது. இப்படி அறை கனத்திருக்கும்போது சாப்பாட்டில் மனம் ஒட்டாது. ஆனாலும் சாப்பிடாமல் படுக்க வயிறு சம்மதிக்காது. கொட்டிக்கிடக்கும் வார்த்தைகள் வேக்கும் கிளீனரால் உறிஞ்சப்படும் வரை இதுதான் கதி.

நூலகத்தில் குழந்தைகள் பகுதியில் இரு குழந்தைகளையும் விட்டு விட்டு புத்தக அலமாரியில் குடும்பம் என்று எழுதப்பட்ட பகுதியில் “மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு “ என்று தலைப்பிடப்பட்ட ஒரு பக்கத்தை எடுத்து புரட்டிக் கொண்டிருந்தபோது மூன்று வயது குழந்தையின் “அஅஅஅஅஅ” என்ற அழுகைக்குரல் உரக்கக் கேட்டது. சில நிமிடங்கள் கூட இருவரும் சண்டை போடாமல் இருக்கமுடியாது. நூலகத்தின் நடுவில் இவள் நின்று அழ நான் சமாதானப்படுத்த முயல நூலகத்தின் அனைத்துக் கண்களும் எங்களைப் பார்ப்பதைத் தவிர்த்து குனிய முயன்று கொண்டிருந்தன. அதே  நொடியில் ஓங்கி அலறிய செல்போன். மறுபுறம் “ஏங்க. உங்க நண்பன் வீட்டில சாப்பிட வர்றாங்க. வரப்ப சிக்கன் வாங்கிட்டு வாங்க
நீங்க அன்னைக்கே தந்தூரி சிக்கன் சாப்பிடனும்னு சொன்னீங்களே லெக் பீஸ் கிடைச்சா வாங்கி வாங்க. “ ன்னு  மனைவி மலர்ந்தாள். வருவிருந்து வைகலும் ஓம்புவ ளின் முகமலர்ச்சியை வீடியோ இல்லாமலே உணர முடிந்தது. இது விரைந்து வந்த வசந்தகாலம். உல்லாலாலா.

Comments

Popular posts from this blog

உறுபசி

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உறுபசி என்ற நாவல் சம்பத் என்ற கதாபாத்திரத்தை அவர்கள் நண்பர்கள் மூவர் மற்றும் அவர்கள் மனைவி வாயிலாக புரிய முயற்சிப்பதேயாகும்.  நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான குடும்பம், சாதனைகள், சம்பாதித்த பணம் போன்ற விழுமியங்களைக் கருத்தில் கொண்டு ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையை மதிப்பீடு செய்து கடைசியாக வெற்றி அல்லது வீழ்ச்சி என்ற ஒற்றைச் சொல்லில் முடிக்க இயலாது என்ற நிதர்சனத்தை உணரவைப்பது இந்த நாவலின் போக்கு. சம்பத் வாழ்ந்த ஒவ்வொரு தருணமும் ஒரு வண்ணமாக இருப்பதால் மொத்தமாக அவனது வாழ்க்கை ஒரு கலைடாஸ்கோப்.  அவன் இறந்த பிறகு கூடும் அவனது கல்லூரி வகுப்புத்தோழர்கள் அவனைச் சிந்தித்து அவனை வரைய முற்படுகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்காக கையில் பாஸ்போர்ட்டுடன் வரிசையில் நிற்கும் நாம் வரிசையை விட்டு வெளியேவந்து அந்த இடத்தில் களியாட்டம் போடுவதைக் கற்பனை செய்ய முடியுமா? சமூகம் நமது மீது சுமத்தியிருக்கும் மதிப்பீடுகள் நமக்கு லட்சுமண் ரேகா. அதைக் கடப்பதற்கு நமக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பீடுகள் ஒன்றுக்கும் சிக்காமல்

ராக் பேப்பர் சிசர்

"பள்ளிக்கூடத்திற்கா?"   சாப்பாட்டுக்கான நேரம் இன்னும் ஆகவில்லை. இந்த நேரத்தில் அலுவலகத்தின் பின் வாசலை நோக்கி நான் விரைந்து கொண்டிருக்கும்போது சீன் இங்காம் தலைப்பட்டார்.  அவர் இதை யூகித்ததில் ஒன்றும் மாயமந்திரம் எதுவும் இல்லை.   பத்து வருடங்களில்  அவருடன் இணைந்து பல தடவை வேலைசெய்திருக்கிறேன்.  சீனுக்கு என்னுடைய பல முறைமைகள் அத்துப்பிடி. திங்கள், புதன், வெள்ளி அலுவலகத்திற்கு காலையில் பிந்தி வருவான், மதியம் மூணு மணிக்குத் தான் சாப்பிடப் போவான், வியாழக்கிழமை சாயங்காலம் லேட்டாத் தான் கிளம்புவான் என்று அவருக்குத் தெரிந்ததை பலரிடம் பெருமையாகச் சொல்லிக் கேட்டிருக்கேன்.   இதெல்லாம் இரண்டாவது வண்டி வாங்குவதற்கு முன்னால். இரண்டு வண்டி இல்லையென்றால் குடும்பம் ஊனமாய்க் கிடக்கும். இப்போதெல்லாம் பள்ளியில் குழந்தைகளை விட்டு, பின் மதியமானதும் இன்னொரு சுற்று போய் கூப்பிட்டு வந்து கொஞ்சம் நொறுக்குக் கொடுத்து அரை மணிநேரம் ஸ்கிரீன் டைம் கொடுத்து கராத்தே வகுப்பு, கணக்கு வகுப்பு என்று இன்னொரு சுற்று போய்  என் முழுநேர டிரைவர் வேலை உமை செய்கிறாள்.  வண்டியில் காத்திருக்கும்போது படித்த கதையை ராத்திரி

கூரைக் கோழிகள்

“அந்த  கத்தரிப்புக்கலர  எடுங்களேன் . மேல் அடுக்குல  ரெண்டாவது வரிச . அதுக்கு கீழ உள்ளது  “ எனக்கு தூக்கி வாரிப் போட்டது.  தெளிவாக் கேட்க   காதின் மடல்களை விரித்து  துவாரங்களைப்  பெரிதாக்கினேன். “அதுவும், அதே  வரிசல  மேல இருக்குற அந்த மஞ்சக்கலரயும்  எடுத்துடுங்க “ இந்த முறை உறுதி செய்துவிட்டேன் . அவளே தான் .  திரும்பக் கூடாது.  இந்த இடத்தை  விட்டு அசையாம இதே மாதிரி குனிஞ்சே  உக்கார்ந்துருவோம் . “சத்தியத்தைத்  தேடிக்கொண்டு போகிறவனுக்குத்  துக்கத்தின்  பரிசு தான் எப்போதும் கிடைத்திருக்கிறது . புறக்கணிப்புகள் . மன முறிவுகள் . ஓட ஓட விரட்டல் “ னு  உயிரியல் பூங்காவில்  வாசித்த அதே  குரல்.அவள் எப்போதும்  கைப்பையில்  சுந்தர ராமசாமியின் “ ஜே ஜே  சில குறிப்புகள் “  வைத்திருந்த காலம்.  பூங்காவில்  அருகில் உட்கார்ந்து     அவள் கோடு  போட்டு வைத்திருந்த அந்த வரிகளை எனக்காக பலமுறை  வாசித்து காண்பித்து இருக்கிறாள் .    அந்தப் பக்கம் முழுவதும் ஏற்ற  இறக்கத்துடன்   வாசித்து “ கூரைக்  கோழிகள் சிரிக்கக் கூடும் . காகங்கள்  சிரிக்கக்கூடும். சற்றுக் குரூரமான  , கொடுமையான சிரிப்புத்தான்.  அப்போதும் சூரியன