Skip to main content

ராக் பேப்பர் சிசர்

"பள்ளிக்கூடத்திற்கா?"  

சாப்பாட்டுக்கான நேரம் இன்னும் ஆகவில்லை. இந்த நேரத்தில் அலுவலகத்தின் பின் வாசலை நோக்கி நான் விரைந்து கொண்டிருக்கும்போது சீன் இங்காம் தலைப்பட்டார்.  அவர் இதை யூகித்ததில் ஒன்றும் மாயமந்திரம் எதுவும் இல்லை. 


 பத்து வருடங்களில்  அவருடன் இணைந்து பல தடவை வேலைசெய்திருக்கிறேன்.  சீனுக்கு என்னுடைய பல முறைமைகள் அத்துப்பிடி. திங்கள், புதன், வெள்ளி அலுவலகத்திற்கு காலையில் பிந்தி வருவான், மதியம் மூணு மணிக்குத் தான் சாப்பிடப் போவான், வியாழக்கிழமை சாயங்காலம் லேட்டாத் தான் கிளம்புவான் என்று அவருக்குத் தெரிந்ததை பலரிடம் பெருமையாகச் சொல்லிக் கேட்டிருக்கேன். 



 இதெல்லாம் இரண்டாவது வண்டி வாங்குவதற்கு முன்னால். இரண்டு வண்டி இல்லையென்றால் குடும்பம் ஊனமாய்க் கிடக்கும். இப்போதெல்லாம் பள்ளியில் குழந்தைகளை விட்டு, பின் மதியமானதும் இன்னொரு சுற்று போய் கூப்பிட்டு வந்து கொஞ்சம் நொறுக்குக் கொடுத்து அரை மணிநேரம் ஸ்கிரீன் டைம் கொடுத்து கராத்தே வகுப்பு, கணக்கு வகுப்பு என்று இன்னொரு சுற்று போய்  என் முழுநேர டிரைவர் வேலை உமை செய்கிறாள். 


வண்டியில் காத்திருக்கும்போது படித்த கதையை ராத்திரி பிள்ளைகள் தூங்கியபின் நான் கேட்காமலே சொல்ல ஆரம்பிப்பாள். கதையின் நுட்பங்களையும்  ஆழங்களையும் உணர்ச்சிப்பெருக்குடன் சொல்லிக்கொண்டிருப்பாள். விடும் கண்ணீராகட்டும் பொலிந்த முகமாகட்டும் இருட்டை மீறி நிற்கும். இன்னும் படிக்காத பக்கங்களை பல கோணங்களில் யோசித்து "அப்படி இருந்தா நல்லா இருக்கும்ல.. இல்ல" என்று பிரமித்து என்னிடமும் உறுதிப்படுத்திக் கொள்வாள். 


இப்போதெல்லாம் அலுவலகத்திற்கு 

சீக்கிரமாக வந்து சீக்கிரமாகவே வீடு திரும்பிவிடுகிறேன். சீனுக்கு இதுவும் தெரியும். ஒரு நாள் அலுவலகத்தின் சிற்றுண்டியகத்தில் தேநீருக்காக காத்திருக்கும்போது குழந்தைகள் பற்றி பேச்சு எழுந்தது. அவர் "டூட், பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை அனுப்புனா மட்டும் உன் கடமை முடிஞ்சுதுன்னு நினைக்காதே. அப்பப்ப பள்ளிக்கூடம் போய் டீச்சருக்கு உதவி பண்ணணும். பள்ளிக்கூடத்தில நிறைய விஷயங்கள் தன்னார்வலர்கள வச்சித்தான் செய்ய முடியும். விளையாட்டு தினமாகட்டும், பன்னாட்டு பண்பாட்டு தினமாகட்டும், நிறைய வேலை கிடக்கும். பெற்றோர்கள் தான் கை கொடுக்கனும். குழந்தைகளுக்கு கதை சொல்லப் போகனும். அறிவியல் பரிசோதனைகளுக்கு உதவி தேவைப்படும். பள்ளிக்கூடத்தில உதவி தேவைன்னு கேட்டா முத ஆளா நிக்கனும். " என்று சொல்லி நிறுத்தினார். 



தேநீர் இயந்திரத்தினுள் தேங்கியிருந்த வடிகட்டப்பட்ட தேநீர்ப்பைகளை எடுத்து அங்கிருந்த அவருடைய குப்பைத் தொட்டியில் கொட்டி முடித்திருந்தார். அவர் வீட்டின் செடிகளுக்கான உரம் அது. சில நேரங்களில் நான் தேநீருக்கு வரும்போது பைகள் நிறைந்திருந்தால் எடுத்து அவருடைய அந்தக் குப்பைத் தொட்டியில் போடுவேன். 


"உங்க ஊர்க்கதை  இந்த ஊர்க்குழந்தைகளுக்குத் தெரியாது. சொல்ற உனக்கும் கேட்கிறவங்களுக்கும் வித்தியாசமான அனுபவம். நான் பள்ளிக்கூடம் போகும்போது ஒரு ஜப்பானிய அம்மா அடிக்கடி வந்து ஓரிகாமி சொல்லித்தருவாங்க. என் பையனோட வகுப்பில ஒரு ஆராய்ச்சியாளர் அம்மா ஸ்ட்ராபெர்ரியிலுருந்து எப்படி குரோமோசோமை பிரிக்கிறதுன்னு சொல்லிக்கொடுத்திருக்காங்க.  ஏதோ ஒரு ஆல்கஹாலில் திடமாவும் இல்லாமல் திரவமாவும் இல்லாமல் சளி மாதிரி குரோமோசோம் மிதந்துட்டு இருந்தது. அந்த டம்ளரை வச்சுக்கிட்டு எங்க வீட்டுப் பையன் ஒரு வாரம் வந்த வரத்து இருக்கே. நீயும் போய்ப்பாரு. ஓன்னும் பெருசா தெரியலன்னாலும் பரவாயில்லை. லைப்ரரில புத்தகம் அடுக்கவும் ஆள் தேவப்படும்.  ஒருமுறை போய்ட்டு வந்துட்டு சொல்லு" 


அதே நேரத்தில் அந்த சிற்றுண்டியகத்தில் இருந்த பெரிய குப்பைத்தொட்டியைத் திறந்து அங்கு மேலாகக் கிடந்த பெரிய பெரிய அட்டைக் குப்பைகளையும் குடித்துப்போட்ட  கோக் புட்டிகளையும் எடுத்து முடித்திருந்தார். அவற்றைக் கொண்டுபோய் மறுசுழற்சிக்காக வைக்கப்பட்டிருந்த குப்பைகளில் சேர்ப்பார். யாராவது தவறாகக் குப்பையை மாற்றிப்போட்டிருந்தால் இவர் கண்ணிலிருந்து தப்பாது. 


"இந்த கிழடு வேலையில்லாம ஏதோ சொல்றான்னு ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடாத" என்று சொல்லி அந்த அறையை விட்டு கிளம்பினார். 


அவர் சொன்னதைக் கேட்டுத்தான் பெரிய பையன் விதுரனின் வகுப்பில்  நூல்வாசிப்பிற்கு பெயர் கொடுத்திருந்தேன். பத்து நாட்களுக்கு முன்னரே கவுண்டி நூலகம் சென்று நிறைய புத்தகங்களை எடுத்து வந்தேன். விதுரனுக்கு ஒவ்வொன்றாக வாசித்து காண்பித்து அவனுக்கு பிடித்திருந்த மூன்று புத்தகங்களைத் தேர்வு செய்திருந்தேன். 


அதே மூன்று புத்தகங்களைப் பலமுறை அவனுக்கு வாசித்து காண்பித்து ஏற்ற இறக்கங்களையும் உச்சரிப்புகளையும் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். பரீட்சைக்கு படிக்கும் மாணவனின் தீவிரம் பரவியிருந்தது. 


விதுரனுக்கு ராஐ உடை உடுத்தப்பட்டிருந்தது. கையில் செங்கோல் ஒன்றும் கொடுக்கப்பட்டு ஆசனம் சிம்மாசனம் போல் கிடைத்ததை  வைத்து ஜோடிக்கப்பட்டிருந்தது. ராஜாவுக்கு புத்தகம் படிப்பதற்காக அவருக்கு அருகில் என்னுடைய இருக்கை போடப்பட்டிருந்தது. ராஜாவின் முகத்தில் கம்பீரத்திற்கு பதிலாக புதிதாய்ப் பூத்த பூக்களின் மலர்ச்சியே அதிகம் தெரிந்தது. 


வாசிக்கும் முன் பிள்ளைகளை ஆர்வப்படுத்துவதாக நினைத்து ஏதேதோ கேள்விகளைக் கேட்டு அவர்கள் முகத்தில் ஏதும் புரியாத அறிகுறி பலப்பட்டது. ஆரம்பமே சரியில்லை. 


வாசிக்கும் போதும் வார்த்தைகள் தெளிவற்று நிதானமின்றி வந்து விழுந்தன. சிந்தனையும் வார்த்தைகளும் ஒத்திசைக்கவில்லை. எனது உச்சரிப்பு சரியா? இந்தக் குழந்தைகள் நான் சொல்வதைப் புரிந்து கொள்கின்றனவா?  இந்த ஊர்க்கலாச்சாரத்திற்கு ஒவ்வாத வார்த்தைகளை ஏதாவது பிரயோகம் செய்துவிடுவேனோ? சிந்தனை தறிகெட்டு சிறுத்தை வேகத்தில் ஓட பாஷையோ சிங்கம் போல் தாவித் தாவி பின் தொடர முயல்கிறது. முடிவற்ற சீரற்ற ஒட்டம். சிங்கம் சிறுத்தையைத் தாவிப்பிடித்து பின்னங்கழுத்தை கவ்விக் குதற  சிறுத்தை ரத்தக் காயங்களுடன் தப்பித்து ஓடுகிறது. சிங்கத்துக்கும் பெருங்காயம். 


அவை அழகிய கடற்கரையை ரசித்துக் கொண்டே கைகோர்த்து நடக்கும் கணவனையும் மனைவியும் மாதிரியல்லவா இருக்கவேண்டும்.  வாசிக்கும் கண்களாவது ஒழுங்கிற்குள் வரலாம். எப்படியாவது சீக்கிரம் சென்றடையவேண்டும் என்ற வேகம். இருபதுக்கும் மேற்பட்ட மதிப்பீட்டாளர்கள் முன் நிற்கும் ஒரு போட்டியாளர் போன்ற உணர்வு. 


நான் உச்சரிப்பில் தடுமாறி குழந்தைகள் முழித்துக் கொண்டிருக்கும்போது ஃபைல்களில் வேலைபார்த்துக்கொண்டிருந்த மிஸ். ஹேரிங்க்டன் தலைப்பட்டு வார்த்தைகளை சரியாக உச்சரித்து விளக்கம் கொடுத்து உதவினார்.  தமிழிலே எனக்கு உச்சரிப்பு வராது. தமிழாயினும் ஆங்கிலமாயினும் அதே கதை. மொத்தத்தில் வாசித்து முடிக்கும் போது குழந்தைகளிடம் எதிர்பார்த்த உற்சாகம் நிலவவில்லை. இது மாதிரி  இனிமேல் எந்த விசயத்திற்கும் அவசரப்பட்டு தலையைக் கொடுக்கக்கூடாது என்றே துடித்துக்கொண்டிருந்தது. 


திருப்தியின்மையை சீனிடம் சொல்லச் சென்றிருந்தேன். "எனக்கு ஓரிகாமி சொல்லிக்கொடுத்த அந்த ஜப்பானிய அம்மாவுக்கு சுத்தமாக ஆங்கிலம் வராது. அவங்க பையன்தான் அடிக்கடி உதவுவான். உனக்கு என்ன ஒத்துவருதுன்னு பார்த்துட்டே இரு"  என்று காத்திருக்கச் சொன்னார். 


சட்டையில் ஒட்டியிருந்த தன்னார்வலர் என்ற அடையாளத்தை கிழித்து எறிய மனமில்லை. அலுவலகத்தில் கணிணியின் பக்கவாட்டில் ஒட்டிவைத்து ரகசியமாய் அடிக்கடி பார்த்து பூரித்துக்கொண்டேன். 


ஒரு பென்சில், இரண்டு நீண்ட பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்கள், நான்கு தம்ளர்கள். இந்த சில்லறைப் பொருட்களை வைத்து காற்றின் வேகத்தை  அளக்கும் சூத்திரத்தை ஏதோ ஒரு அம்மா பகிரப்போவதாக கவிதா நாயுடு உதவிக்கு ஆள் தேவை என அனைத்துப் பெற்றோர்களுக்கும் செய்தி அனுப்பியிருந்தார். கவிதா ஒரு மாணவரின் பெற்றோர். இதுபோன்ற  சிறப்பு வகுப்புகளை  ஒருங்கிணைப்பவர். ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே, என்னவென்று போய்ப்பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்து பெயரையும் பதிவு செய்தேன். 


மேக்காலின் முனைகளில் கட்டியிருந்த சுணங்கிய காளைகளைப்போல் ஸ்ட்ராவின் முனைகளில் சொறுகப்பட்ட காகித தம்ளர்கள் சுற்றாமல் போராட்டம் செய்தது. குண்டூசி சரியாக இறுக்கவில்லை. தம்ளரின் அடிப்பகுதியில் சரியான மத்தியில் துளையிடவில்லை. ஒவ்வொரு கருவியிலும் ஒரு தினுசானப் பிரச்சினை. என் மேற்பார்வையில் நடந்த ஆறில் எதுவுமே வேலைசெய்யவில்லை. 


சாமியாடிக்கே தன் பிள்ளை தனியாகத் தெரியும்போதும் எனக்குத் தெரியாதா என்ன. என் பிரத்யேக கவனிப்பில் செய்யப்பட்ட இதையும் சேர்த்துத்தான் ஆறு. காற்றாடி சுற்ற ஆரம்பித்தவுடன் அதன் வேகத்தை அளக்க வேண்டிய கருவி வேகம் தாங்காமல் தன்னையே உடைத்து காற்றாடியின் பாதம் பணிந்தது. 



அறையைச் சுற்றி வந்து கொண்டிருந்த கவிதா என் மேசையிலும் ஒவ்வொன்றாக சரிசெய்ய உதவினார். எப்போதும் சிரிக்காத முகம் இப்போதும் சிரிக்கவில்லை.  பக்கத்து மேசையில் முடித்திருந்த பையன் ஒருவன் எங்களுக்கு காற்றாடியைப் பிடிக்க வந்தான். இன்னொருவள் பரிசோதனைகளின் முடிவுகளை எழுத உதவினாள். இத்தனை கரங்கள் சேர்ந்து உருவாக்கிய அனிமோமீட்டர் பென்சிலின் உச்சியில் ஒற்றைக்காலில் நின்று புதிதாகப் பரதம் படித்த அமெரிக்கப் பெண்மணியைப் போல் பார்த்துப் பார்த்து தான் ஆடியது. இந்த முறையும் சறுக்கியது வருத்தம்தான். 


வண்டியை அலுவலகத்தின் பின் பகுதியில் நிறுத்தி விட்டு பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்து நடக்க ஆரம்பித்தேன். சட்டையைக் காண்பித்து " ஸ்டிக்கரை எடுக்க மறந்துட்டீங்க போலிருக்கு. பரவாயில்லையே ஸ்கூலுக்குலாம் போவீங்களா. வெரி நைஸ் " என்று ஜெஃப் சிங்கிள்டன் கேட்டார். நினைத்தது நடந்துவிட்டது என்ற உள்ளூர பூரிப்பு ஒருபுறம். இது மறதி ஒன்றும் இல்லை என்று பதிலளிக்கப் போதிய தைரியம் இல்லை. உண்மையில் அந்த ஸ்டிக்கரைச் சேர்த்து வைப்பதில் ஏதோ ஒரு இனம்புரியாத புத்துணர்ச்சி. 


 பள்ளியை விட்டு வெளியேறும் முன் மேகியின் அப்பா அந்த அடையாளத்தாளைக் கிழித்து பள்ளியின் குப்பைத்தொட்டியில் போட்டார். கிழிக்க மனமில்லை, பத்திரப்படுத்த வேண்டும் என்றால் அதைக் காரில் ஏறியவுடன் எடுத்து பத்திரமாக எடுத்துக் கூட வைத்திருந்திருக்கலாம். நான்கு பேர் பார்த்து பாராட்டவேண்டும். அப்படியாகத்தான் இருக்கவேண்டும். 



ராஜாவாக எந்தக் குழந்தைக்குத் தான் பிடிக்காது. மீண்டும் வாசிக்க விதுரன் பலமுறை கெஞ்சியதால் மீண்டுமொரு முறை சென்றேன்.   தைரியம் வந்தாலும் உச்சரிப்பு எதிர்பார்த்த மாதிரி முன்னேறி வரவில்லை. 


இந்த முறை பார்க்கிங் லாட்டில் நடந்துகொண்டிருந்த அண்ணாமலையைப் பார்த்தேன். "ஏண்டா இப்படி ஊரை ஏமாத்திட்டு திரியுற" என்றான். பொருள் உடையாமல் இருக்க சுற்றி காற்றடைத்த  குமிழிகளையோ பைகளையோப் பெட்டிக்குள் போட்டு அமேசான் அனுப்புவதுபோல முன்னும் பின்னும் வார்த்தைகளைப் போட்டே பேசுவான். 


ஒட்டியிருந்த ஸ்டிக்கரின் மதிப்பு இவனிடத்தில் செல்லுபடியாகவில்லை. அலுவலகத்தின் பின் கதவைத் திறந்து கொண்டே ஜெஃப்க்கு  கொடுத்த அதே சிரிப்பை  பதிலளித்தேன். 



இரண்டொரு முறை புத்தகம் வாசிக்க  மீண்டும் சென்றேன்.  ராஜா வேஷம் அலுப்பான பிறகு "உன் அசென்ட் சரியில்லப்பா.  நீ இனிமே படிக்கத் தேவையில்லை" என்று என்னை விடுவித்தான்.  அந்த வருடக்  கடைசியில்  பள்ளியிலிருந்து “தன்னார்வப் பணி புரிந்தவர்” என்று பள்ளியின்பெயரையும் ஆண்டையும் அச்சிட்ட ஒரு வட்டக் காந்தத்தைக் கொடுத்திருந்தார்கள்.  மறுநிமிடமே என் காரின் பின்பகுதியை  அலங்கரிக்க ஆரம்பித்தது.  ஸடிக்கரை ஒட்டியே நான் திரிந்த மாதிரி இனி இந்தக் காந்தத்தை என் வண்டி சுமந்து செல்லும். இதுவரை அடையாளத்தாளைச் சுமந்திருந்த மனமும் உடனே இலேசானது. 


பெண் குழந்தையும்  நூல் வாசிப்புக்கு வாப்பா என்று நச்சரித்துக் கொண்டிருந்தது. ஆசிரியையின் அறிவுறுத்தல்படி ரகசியமாகச் சென்று அவர்கள் நூலகத்தில் காத்திருந்தேன். நிகழ்ச்சியின் பெயரே மர்ம வாசிப்பாளர். 


வெளியே வானம் கறுத்து மழை வருவதற்கான அறிகுறிபோல இருந்தது. மிஸ். கேதரீனைத் தொடர்ந்து அவர்கள் வகுப்பு முழுவதும் வந்து அமர்ந்தனர். 


என்னைக் கண்டதும் அவளுக்கு ஆச்சரியம் கலந்த  உற்சாகம். அவளுக்கென்று ஒதுக்கப்ட்ட இருக்கையில் அமராமல் "  உன் பத்தக்கில நிக்கேன்" என்று சொல்லி என்னருகே நின்று புத்தகத்தின் பக்கங்களைப் புரட்ட உதவியாய் இருந்தாள். 


நான் வாசித்து முடிக்கும் முன் அவசரப்பட்டு பக்கத்தை மாற்ற பலமுறை முயன்றாள். அவளுக்கென்ன எழுத்து தெரியும்? வார்த்தைகளும் புரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அவளுடைய தேவையெல்லாம் மற்ற அப்பாக்கள் போல நானும் வந்து புத்தகம் வாசிக்க வேண்டும். 


நான் வாசிக்க ஆரம்பித்து ஐந்தாறு நிமிடங்களில் பள்ளியின் ஒலிபெருக்கி இரைந்தது. வெளியே பனிப்பொழிகிறது. குழந்தைகளை அழைத்துக் காண்பியுங்கள் என்ற பள்ளி முதல்வரின் அறிவிப்பு அது. 

 


 இரண்டு வருடங்களுக்கு ஒரிருமுறை எப்போதாவது வரும் பனிப்பொழிவு அன்று நான் வாசிக்க ஆரம்பித்ததும்  வந்தது. நான் வாசிக்கும் அழகைப் பார்த்து வானம் வெண்பனியைப் பொழிந்து ஆசீர்வாதம் செய்தது. மிஸ் எப்படி என்னிடம் சொல்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே  துணை ஆசிரியை வகுப்பைக்  கிளப்ப ஆயத்தமானர்கள். 


புதிதாக வந்த வேலையை எப்படி ஆரம்பிக்கலாம்னு  கூட்டத்தைக் கூட்டி யோசிச்சு ஒரு வழியாக இப்படி இப்படி பண்ணி முடிக்கலாம்னு முடிவு செய்து தேவையான ஆட்களை ஒதுக்கி பிள்ளையார் சுழி போட்டு வேலை  செய்ய ஆரம்பித்து இரண்டு நாட்களில் வேலை கொடுத்த கம்பெனியே திடீரென்று காணாமல் போனமாதிரி ஒரு உணர்வு. 


புத்தகத்தை மூடி விடைபெறும் நேரத்தில் மிஸ். கேதரீன் "எங்களுக்காக நூல் வாசிக்க வந்தமைக்கு நன்றி." என்று எழுதிய ஒரு பளபளக்கும் அட்டையைக் கொடுத்தார். குழந்தைகள் ஜிகினாத் தாள்களை ஓட்டியும் வண்ணங்களைத் தெளித்தும் அலங்கரித்திருந்தனர். என்னுடைய வீட்டின் வரவேற்பறையில் சுவரில் ஒட்டிவிட்டேன். 


 


எழுத்துக்கள் வார்த்தையாகின. வார்த்தைகள் வாக்கியமாயிற்று. வாக்கியங்கள் கதையாகியது. இப்போது விதுரனுக்கு வாசிக்கத் துணை தேவையில்லை. ஆகையால் அதன்பின் வாசிக்கக் கூப்பிடவில்லை.  ஆனால் அவர்கள் பள்ளியில் புத்தகக் கண்காட்சிக்கு புத்தகங்களை அடுக்குவதற்கு வற்புறுத்தினான். அப்பா வேலை செய்தால் அவன் வாங்குகிற புத்தகத்தில் பதினைந்து சதம் தள்ளுபடியாம். 



அடுக்கி முடித்து வந்தபின் அலுவலகத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த போது அண்ணாமலை வந்தான். "ஏண்டா இந்த ஸ்டிக்கரைக்கூட வச்சிட்டே திரிவியாடா. உன் கூத்து தாங்க முடியல. அவ்வளவு விளம்பரம் தேவையாடா உனக்கு. ஏண்டா இப்படி ஊரை ஏமாத்திற.". 


 இந்த முறை சிரிப்புடன் கடந்து செல்லவில்லை. மாறாக சீற ஆரம்பித்திருந்தேன். என்னையறியாமல் ஏதோ ஒரு பிடிப்பு வந்து ஒட்டியிருந்தது போலும். "ஏண்டா அப்ப உன் பையன் ஊரை ஏமாத்துறானாடா. அன்னைக்கு என் பையனோட ஸ்கூல்ல சயன்ஸ் நைட்ல டிக்கெட் வாசல்ல கொடுக்கத பார்த்தேன்டா. "


" டேய் அவன் வேலைபாக்கப் போயிருந்தாண்டா. அதுக்கப்புறம் உன்ன மாதிரி ஸ்டிக்கரை மறந்து போனமாதிரி ஒட்டிட்டே திரியலடா" 


"அவன என்ன பொதுநலத்துக்காடா வேலை பார்க்க அனுப்பற. உங்களுக்குத் தேவை அவர்ஸ். இந்த மணிக்கணக்கை காமிச்சு  நல்ல காலேஜ்ல இடம் வாங்குவிங்க". 

 

அப்பா, அம்மாவுக்கு இல்லாத பொதுநல ஆர்வம் அவர்கள் குழந்தைகளுக்கு எப்படியோ  பீறிடுகிறது. ஆர்வம் இல்லையெனினும் பல நேரங்களில்  தள்ளப்படுகிறார்கள். கணக்கு வகுப்புக்கு கொண்டுபோய் விடுவதுபோல் பெற்றோர்கள் காரில் விட்டு காத்திருக்கின்றனர். 


இன்சூரன்ஸ் கம்பெனி நடத்தும் ஒட்டப்பந்தயத்தில் எங்கள் அலுவலகம் சார்பில் கலந்துகொள்பவர்களுக்கு சீருடையை கலையுணர்வு கொண்டவர்கள் வடிவமைக்க அதை சட்டையாக்கிப் பின்னர் விநியோகம்  செய்யும் வேலையை எடுத்திருந்தேன். இன்னொரு நண்பர் பாலகுமார் இதைக்கண்டு என் மீதான மிகுதியான அன்பால் இப்படிச் சொன்னார். 


"மச்சி, ஏற்கனவே நீங்க செஞ்ச ப்ராடக்ட் விலைபோகாம தேங்கியிருக்கு. கிட்டத்தட்ட நீ வேற பெஞ்ச்ல இருக்க. இந்த நிலமயில இதெல்லாம் செஞ்சு ஏன் பிரச்சினையில மாட்டிக்கிற. உங்க மேனஜர் இதெல்லாம் பார்த்துட்டு இருப்பாரு." 


செய்யும் அரைகுறை வேலைகளுக்கு இத்தனை எதிர்வினைகளா? வேலைப்பளு குறைவாக இருக்கும்போது தானே இது போன்ற காரியங்களை எடுத்துச் செய்ய முடியும். இந்த அன்பை எப்படி எதிர்கொள்வது? 


பனியன் நிறுவனம் மாதிரிக்கு அனுப்பிய சட்டைகளைத் திரும்பிக் கேட்கவில்லை. ஓட்டப்பந்தயம் நடக்கும் நாளிலும் யாருக்கும் இது தேவைப்படவில்லை. அதையும் நானே அணிந்துகொண்டேன். 


சீன் யூகித்தது போல் பள்ளிக்கூட விளையாட்டு தினத்திற்கு வேலைபார்க்கச் சென்றுகொண்டிருந்தேன். விதுரனின் வகுப்புத்தோழன் ஜலீல் ஜான்சனை பார்க்கப்போகிறேன் என்பதே ஒரு தனி உந்துதலைக் கொடுத்தது. அவனைப் பார்ப்பதற்காகவே இந்த வேலைக்கும் பெயர் கொடுத்திருந்தேன். விதுரன் அவன் வகுப்பைப் பற்றிப் பேசும்பொழுதெல்லாம் ஜலீலைப் பற்றி மறக்காமல் விசாரிப்பேன். 



பள்ளியை அடைந்தவுடன் கோச் அகின்சன் வைத்திருந்த வேலைகளில் ஒன்றைத் தெரிவு செய்துகொண்டேன். ராக் பேப்பர் சிசர். வட்ட வளையங்களை வைத்து ஒரு வளைவான பாதை. ஆங்கில எழுத்து S போன்ற வளைவு. இரு முனைகளில் இருந்து வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக இரு அணிகளைச் சார்ந்தோர் ஓடி வருவார்கள். ஓட்டம் சாதாரண ஓட்டம் அன்று. கங்காருவைப் போல தத்தி தத்தி வரவேண்டும். 


இரு அணியின் தலையாக வரும் இருவரும் அவர்கள் சந்திக்குமுடத்தில் ராக் பேப்பர் சிசர் விளையாட வேண்டும். பாறையைத் தாள் மூடிவிடும். தாளைக் கத்தரி வெட்டிவிடும். கத்தரியைப் பாறை நொறுக்கிவிடும். இருவரும் ஒரே நேரத்தில் கையில் மூன்றில் ஏதாவது ஒன்றை சைகை காண்பிக்கவேண்டும். தோற்பவர் அவர் வரிசையின் பின் சேரவேண்டும். ஜெயிப்பவர் அவர் படையுடன் முன்னேற வேண்டும். 

இந்த விளையாட்டின் உயிர்நாடியே அந்த நொடியில் நடக்கும் ஒத்திசைவு. 



ஒழுங்காகத் தத்தி வருகிறார்களா இல்லையா,  ஒரே நொடியில் ராக் பேப்பர் அல்லது சிசரை கையில் சைகை காண்பிக்கிறார்களா இல்லையா என்பதைக் கண்காணிப்பதே என் வேலை. நடுவர் என்பதைவிட மேற்பார்வையாளர் என்பதே சரியானது. 


"நாற்பத்தியாறு பேர் பெயர் கொடுத்திருந்தாங்க. ஆனா வந்தது  இருபத்தியொன்பது பேர். பாதி விளையாட்டை ஒருத்தர்தான் பாக்கவேண்டிய வரும்." என்று கோட்ச் அகின்சன் ஆள் தட்டுப்பாட்டைச் சொன்னார். 


ஒற்றை மேற்பார்வையாளராக வேறொரு சமயத்தில் வேறொரு இடத்தில் இருந்த அனுபவமும் உண்டு. தமிழ்த் தேனீயில் நான் உச்சரிக்கும் வார்த்தைகளைக் கேட்டு குழந்தைகள் எழுதும் வார்த்தைகளை சரிபார்க்கும் பொறுப்பு தான் அது. 


கொற்றவை என்பதை நான் உச்சரிப்பதைக் கண்ட அவள் ற் ஒலிக்காது என்று மறுமொழியுரைத்தாள்.  ழகரம், ளகரம், லகரங்களைச் சரியாகப் புரிந்திருக்கிறார்களா என்பதற்கான அவர்களுக்கான சோதனைகள் எனக்கும் உச்சரிப்பிற்கான சோதனைகள். 


ஆழ்வார்கள், பாலங்கள், சர்க்கரைவள்ளிக் கிழங்குகள். பலவகை. இவற்றையெல்லாம் நான் உச்சரிக்கும்போது போட்டிக்கு வந்த சிறார்கள் கூர்ந்து கேட்டும் புரியாமல் மீண்டும் உச்சரிக்கச் சொல்ல முதல் முறை சரியாக உச்சரிக்கவில்லையோ என்கிற ஆதங்கம். இரண்டாவது முறை உச்சரிக்கும்போது வேறாக ஒலிக்கிறது. மீண்டும் ஒருமுறை கேட்கிறார்கள். எனக்கு ஒத்தாசைக்கு ஆள் இல்லாமல் மூன்றாவது முறையும் நானே உச்சரிக்கவேண்டியிருந்தது. என் உதடுகளும் நாக்கும் வளையும் வளைவுகளைக் கவனித்து யூகிக்க முற்படுகிறார்கள். 


தமிழ்ப்பள்ளியிலாவது வகுப்பிற்கு இரண்டு மூன்று ஆசிரியர்கள் இருப்பதால் அங்கு நான் உச்சரிப்பு சொல்லிக்கொடுக்கவேண்டிய நிலை இருந்ததில்லை. 


போட்டி முடிந்து அவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும்போது இதன் தாக்கம் தொடர்கிறது. கொற்றவை எல்லாம் சரியாக எழுதி ஆழ்வார்கள் மட்டும் ஆள்வார்கள் என ஆயிருந்ததால் என் உச்சரிப்பின் மீது சந்தேகம் வலுக்கிறது. நான் தப்பாக உச்சரித்ததால் அவளுக்கு ஏன் மதிப்பெண் குறையவேண்டும்? மற்றவர்கள் இதைச் சரியாக எழுதியிருக்கிறார்களே. அப்படியென்றால் உச்சரிப்பில் பிழை இருக்க வாய்ப்பில்லையோ? மனதில் நடந்த வாத விவாதங்களுக்குப் பின்னர் கடைசியில் அவள் எழுதியது சரி என்று ஏகமனதாக ஒரு நடுவர் உள்ள குழுவால் தீர்ப்பளிக்கப்பட்டது.  கொற்றவை மயிரிழையில் அந்தப் போட்டியை வென்றெடுத்திருந்தாள். 


"நடுவர், தமிழ்த்தேனீ" என்று என் பெயரிட்ட ஸ்டிக்கர் என்  வீட்டு டாய்லெட்டுன் உட்கதவில் ஒட்டப்பட்டுவிட்டது. தினமு‌ம் அந்த அறைக்கு சென்று  திரும்பும் பொழுதெல்லாம் " நீ நடுவர். நீ நடுவர்" என்று கதவு என்னைப் பார்த்து சொல்லிக்கொண்டிருந்தது. நாளாக ஆக அந்தக் குரலின் வீரியமும் குறைந்து கொண்டிருந்தது. 


அந்த அறையில் திடீரென ஆரம்பித்த நீர்க்கசிவு வாரக்கணக்கில் தொடர்ந்தது. எங்கிருந்து கசிகிறது என்பது மர்மமாகவே இருந்தது. பார்க்க வந்திருந்த அண்ணாமலை கதவையும் பார்த்து விட்டான். காரித்துப்பாததுதான் குறை.


" ஏண்டா காப்பி அடிக்கிறதுக்கு ஒரு விவஸ்தை இல்லையாடா. ஈயடிச்சான் காப்பி. நீங்களும் உங்கத் தமிழ்த்தொண்டும். உங்களுக்கே காமெடியாத் தெரியலியாடா". 


"ஓரு அமைப்பாக உருவெடுத்தால் எல்லாம் இந்த நிலமைக்குத் தான் வரும்டா. உருவத்தைப் பார்த்து எள்ளி நகைக்காத. செய்ற காரியத்தை வைச்சு எடைபோடு ".. இப்படித்தான் அன்று மழுப்பவேண்டியிருந்தது. 


"அது சரி. இந்த ஸ்டிக்கர் சேக்க பழக்கத்தை எப்ப விடுவ.  "


ஜலீலுக்காகக் காத்திருந்தேன். வண்டியில் வரும்போதே நினைவுகள் முழுவதும் ஆக்கிரமித்திருந்தான். ஒவ்வொரு வகுப்பாக வந்து விளையாடித். திரும்பிகொண்டிருந்தது. 


 நெஞ்சில் சிலுவை போட்டு விளையாட ஆரம்பித்த ஒரு மாணவன் தன் சக போட்டியாளர் பாறையை சைகையில் காட்டியபின்பு சிந்திக்க ஒரு நொடி எடுத்து அடுத்த நொடி பாறையை மூடும் காகிதத்தைக் காண்பிக்கிறான். எதிராளி மேல்முறையீடு செய்ய ஆரம்பிப்பதற்குள்  முன்னேறி அடுத்த போட்டியாளரை நோக்கி தத்தாமல் ஓடுகிறான். சில நேரங்களில் இரண்டு பேருமே அந்த இறுதி நொடியில் அடுத்தவர் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க மூடிய கைகளை மட்டும் ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள். பாம்பின் கால் பாம்பறியும். இதுவு‌ம் ஓருவகையான ஒத்திசைவே. 


சில மாணவர்கள் பாறையைக் காண்பிப்பது போல் காண்பித்து எதிராளியின் கையைப் பார்த்தபின் அவர்கள் கத்திரியாக மாற்றுவர். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் எணணம். தெளிவற்ற சைகையைக் காண்பிக்கக் கூடாது என்பது விதியும் கூட. 


அவர்களே வாதிட்டு மீண்டும் ஒருமுறை விளையாட முடிவெடுப்பார்கள். மீண்டும் மீண்டும் தெளிவற்ற சைகைகளைக் காண்பித்தால் என்னிடம் முறையீடு செய்வார்கள். பலமுறை "நீங்கள் வளர்ந்த பிள்ளைகள். உங்களுக்குள் எழும் வேறுபாடுகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி அனுப்பிவிடுவேன். 


ஒரு மாணவனின் எஃப் வார்த்தை முகம் சுளிக்கச் செய்தது. அசூயை வந்து ஒட்டிக்கொண்டது. அவன்தான் கலைந்து கிடந்த தடுக்கி விழ வாய்ப்புள்ள வளையங்களைப் பொறுப்புடன் எடுத்து ஓழுங்கிற்கு கொண்டுவர உதவினான். எனது பொறுப்பையும் சில நிமிடங்கள் அவனேயெடுத்து செய்தான். அவன் அணியினரே விதியை மீறினாலும் கரிசனமின்றி சரியல்ல என்று சொல்லி பின் அனுப்பினான். 


வகுப்பு ஆசிரியர்களும் மாணவர்களைத் திடலில் கொணர்ந்து விட்டு சற்றுத் தள்ளி நின்று நிகழ்வுகளை அவதானித்துக் கொண்டிருப்பர். ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் மாணாக்கர்களுடன் மாணவனாய் விளையாடி வேடிக்கை செய்தார். 


விதுரனின் வகுப்பும் வந்தாயிற்று. என் கண்கள் ஜலீலைத் தேட ஆரம்பித்தது. வரிசையில் கடைசியாக அதே புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான். வரிசையின் பின்னால் இருந்து வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தான்.  அவனுடைய முறையும் வந்தது. மலர்ந்த முகத்துடன் கைகள் ராக் பேப்பர் சிசர் என சோவி குலுக்கும் கைகளைப் போல் குலுங்கிக்கொண்டிருந்தன. 





அவனை முதன்முறையாகப் பார்த்தது பள்ளியின் உணவகத்தில் தான். ரொம்ப நாளாக விதுரன் "அப்பா, என் கூட ஸ்கூல்ல சாப்பிட வாப்பா" என்று நச்சரித்துக் கொண்டிருந்தான். என்ன வேண்டும் என்பதையும் "சிக் ஃபிலே சிக்கன் வாங்கிட்டு வா" எனச் சொல்லிவிட்டான்.  அந்தக் கடையில் அதுவும் மதியவேளையில் வரிசையில் நின்று வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். 


ஒவ்வொரு வண்டியாக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. கையடக்கக் கருவி ஒன்றை வைத்திருந்த அந்த பணிப்பெண் வண்டிக்கே வந்து வேண்டியதைக் கேட்டு குறித்துக்கொண்டது. "ஒரிஜினல் சான்ட்விட்ச். ஊறுகாய் இல்லாமல். மீடியம், பிரெஞ்ச் ஃபிரை, வறுத்த கறித்துண்டு நாலு, கொஞ்சம் மின்ட் மிட்டாய்".  மிண்ட் மிட்டாய் இல்லை என்றால் சிணுங்குவான். 


வாங்கி முடிக்க கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகிவிட்டது. எதிர்பார்த்ததை விட அதிக நேரம் ஆகிவிட்டது. இது தெரிந்திருந்தால் வேலையிலிருந்து சீக்கிரம் கிளம்பி இருக்கலாம். மதிய வேளைகளில் சாலையிலும் நெருக்கடி அதிகமாகத்தான் இருக்கும். சரியான நேரத்துக்கு போகவில்லையெனின் சாப்பாட்டுக்கு என்ன செய்வான். இதை நம்பி அவன் வீட்டிலிருந்து சாப்பாடும் கொண்டுபோகவில்லை. 


மஞ்சள் விளக்கில் வண்டியின் வேகத்தை அதிகரித்தும் சிவப்பான பின்பும் சில இடங்களில் நிற்காமல் விரட்டி சரியான நேரத்திற்கு அந்த உணவறை வந்து சேர்ந்தேன். விதுரனின் வகுப்பு அப்போதுதான் சாப்பிட வந்துகொண்டிருந்தார்கள். 


முகமெங்கும் பல். கொண்டுவந்திருந்த சாப்பாட்டுப்பையைத் திறந்து உணவுகளைத் தனித்தனியாக மேசையில் எடுத்து வைத்தேன்.   விதுரனின் முழுவகுப்பும் ஒரே பெஞ்சில் உட்கார்ந்திருந்தனர். ஆயுஷ் 1, ஆயுஷ் 2, நபீல், வேதானந்த் போன்ற தெரிந்த முகங்களும் இருந்தன. 


"என் பெயர் ஜலீல். நானும் விதுரனும் ஓன்னா நிறய விளையாடுவோம்.". உணவகத்தின் கூச்சல்களுக்கு மத்தியில் அவனே அறிமுகம் செய்துகொண்டான். "அவன் கோல் கீப்பர். நான் டீபென்ஸ்."  



எனது சின்னஞ்சிறு பருவத்தில் ஊருக்கு யாரையாவது கொணர்ந்து விட எப்போதாவது வரும் அம்பாசிடர் காரை சுற்றி நின்று ஊரில் வேடிக்கை பார்ப்பது போல அந்த வரிசையில் இருந்த அனைவரின் கண்ணும் விதுரனின் சாப்பாட்டு மேல் இருந்தது. பேச்சு முழுவதும் அதைச் சுற்றியே இருந்தது. 


ஜலீல் மெதுவாக விதுரன் வைத்திருந்த வறுத்த சிக்கன் துண்டுகள் இருந்த டப்பாவை மெதுவாக தன் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தான். ஏதோ பேசுகிறார்கள் அனைவரும் கொல்லென்று சிரிக்கின்றனர். விதுரன் அதைப் பார்த்து கொண்டேயிருந்து ஐலீலின் பக்கம் சென்றவுடன் அதை எடுத்து அவன் பக்கம் வைக்கிறான். 


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று தினமு‌ம் பள்ளியில் மதியம் சாப்பிடும் முன் கூட்டத்தோடு கூட்டமாக பொருள் ஒன்றும் தெரியாமல் நான் பாடி வந்தவன் தான். பார்க்க வைத்து சாப்பிடுவது நாகரீகம் அன்று அறமும் கிடையாது என்ற மரபிலிருந்து வந்தவன் தான். 


ஆனால் அமெரிக்காவில் பள்ளியில் மாணவர்களுக்கு சொல்லும் அறிவுரைகளில் மிக முக்கியமான ஒன்று உணவை பகிரக்கூடாது என்பதுதான். உடனே ஒழுக்கச் சீர்கேடாக கீழ்நோக்கி பார்க்கவேண்டாம். இங்குள்ள குழந்தைகளுக்கு சாப்பாட்டில் பல ஒவ்வாமை இருக்கின்றன. உதாரணத்திற்கு சில குழந்தைகளுக்கு வேர்க்கடலை ஒவ்வாது. என்றோ ஒரு நாள் தெரியாமல் சாப்பிட்டால் முகம் வீங்கி தொண்டைக்குழல்கள் வீங்கி மரணமாகவும் வாய்ப்புள்ளது. 


பெரியவர்களும் இதனாலோ என்னவோ ஏதாவது சாப்பிடும்போது சாப்பிடுகிறீர்களா என்று சொல்லித் தருவதில்லை.


அலுவலகத்தில் நடுப்பாதையில் நின்று கையில் ஒரு முழு ஆப்பிளை வைத்து சாப்பிட்டுக்கொண்டே எதிரில் நிற்கும் ஒருவரிடம்  சகஜமாக பேசிக்கொண்டிருக்கும் தமிழகத்துக்காரரைப் பார்த்தால் இங்கு குடியேறிப் பல வருடங்கள் இருக்கும் என யூகித்து விடலாம். 


எனக்கு ஏதோ தப்பு செய்தது போல் உணர ஆரம்பித்தேன். வீட்டிலிருந்து சாப்பாடு செய்து கொண்டு வந்திருந்தால் இந்தப் பிரச்சினை இருந்திருக்காதோ என எண்ணினேன்.வழக்கமான சப்பாத்தியை வெறும் தேன் வைத்து சுருட்டிக் கொணர்ந்திருந்தால் இப்படி எல்லாரும் வித்தியாசமாகப் பார்த்திருக்க மாட்டார்கள். 


  இதோ சாப்பிடு என்று இரண்டு சிக்கன் துண்டுகளை ஜலீலிடம் நீட்டத் தைரியம் இல்லை. அவன் இழுத்து விளையாடும்போது இரண்டு துண்டுகளை எடுத்து அவனே சாப்பிடமாட்டானா என்று மனம் பதைத்துக் கொண்டிருந்தது. எந்தவித குற்ற உணர்ச்சியுமன்றி வீடு திரும்பலாம். ஆனால் அவனருகே இழுத்துச் சென்றவுடன் விதுரன் மீண்டும் இழுத்து அவன் பக்கம் வைத்து விடுகிறான். கூச்சல்களுக்கு இடையே டப்பா அங்குமிங்கும் இரண்டொரு முறை நகர்ந்து கொண்டிருந்தது. 


உணவுக்கூடத்தின் பொறுப்பாளரும் ஒவ்வொரு மேசையாக சுற்றி வந்து கொண்டிருக்கிறார். கூச்சல் அதிகரித்ததால் "அமைதி அமைதி. அடுத்த ஒரு நிமிடம் யாரும் பேசக்கூடாது. அந்த ஒரு நிமிடத்தில் யாராவது பேசினால், இன்னொரு நிமிடம் பேசாமல் இருக்க வேண்டிவரும் " என்று கூச்சலை நிசப்தமாக மாற்றியிருந்தார். 


 உணவு நேரம் முடிந்து காரில் ஏறியவுடன் மீதமிருந்த சிக்கன் துண்டுகளை நானே சாப்பிட்டு முடித்தேன். விதுரனும் சாப்பிடவில்லை ஜலீலும் சாப்பிடவில்லை. விரல்களை நக்கும் அளவுக்கு சுவையானதுதான். 


அன்றிரவு உமையிடம் வழக்கத்திற்கு மாறாக நான் கதை சொல்லிக்கொண்டிருந்தேன். "நீ இப்படி புலம்பற. ஆனா சங்கீதாட்ட பேசிட்டு இருக்கும்போது அவர் பள்ளிக்கூடத்தில ஏதோ வேலையாம். மதியம் சாப்பிட வீட்டுக்கு வர்ராருன்னு சொன்னேன். என்ன ஏதுன்னு கேக்காம டீச்சருக்கு ஹெல்ப் பண்ணுனா உங்க பையன ஸ்பெசலா டீச்சர் பாத்துப்பாங்களான்னு சிரிச்சிக்கிட்டே கேட்டுது. சிரிச்சா கோபப்படமாட்டோம்னு நினைச்சுருக்கு. நான் எல்லாத்தையும் அவுத்து விட்டு தான் போன வைச்சேன். சத்தத்தையே காணுமே. இத எல்லாம் சும்மா விடக்கூடாது " . 


பின் இருவரும் நீண்ட நேரம் மௌனித்து இருந்தோம். எந்த வார்த்தை இந்தக் கொதிப்பை ஆற்றும் என்று எண்ணியிருந்தேன். சிறிது நேரம் கழித்து உமை  மொளனத்தைக் கலைத்தாள். 


"  ஜலீலுக்குப் பதிலா இதே வேத் பண்ணியிருந்தா இவ்வளவு சீரியஸா எடுத்து பேசிட்டு இருப்பியா என்ன. அவனுக்கு சிக்கன் ஒரு விளையாட்டுப் பொருளாத் தான உருக்கும்."  


வேதானந்த் அப்பா ஏதோ ஒரு கொள்கைக்காக சைவமாக இருப்பதால் பையனுக்கு  சிக்கன் மேல் ஆசை இருக்காது என நம்புவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அவளிடம் விவாதத்தைத் தொடராமல் ஒத்துவருவது போல் காட்டிக்கொண்டேன். 




சீனிடம் சாப்பாட்டு நேரத்தில் நடந்ததைப் பற்றி சொல்லச் சென்றேன். முதல் பெயரையும் குடும்பப் பெயரையும் சேர்த்து சிங்கம் என்ற ரகசியப் பெயர் ஒன்றிருக்கிறது. ரகசியமென்ன அவரிடமே அதைப்பற்றி சொல்லியிருக்கிறேன். இந்த ஊரிலே பிறந்து வளராததால் ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் பத்து பேரிடம் முன்னவும் பின்னேயும் கருத்து கேட்கவேண்டியுள்ளது. 


"நீ ஒரு பெரிய பிசினாரியா இருப்பப் போலிருக்கு. ஸ்கூல்ல பத்து பேருக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தால் அஞ்சு டாலர் ஆகுமா.."   


அமைதிக்காக அவரிடம் போனால்  அவர் வேற ஏதோ சொல்லி குழப்பி விட்டாரே… 


ராக் பேப்பர் சிசர் என்று ஜலீல் வேகமாக கையால் உருவப்படுத்த எதிராளியும் அதே வேகத்தில் கைகளையாட்டி பேப்பரைக் காண்பித்து நிப்பாட்ட சில விநாடிகள் கழித்து சுதாரித்து ஜலீல் கத்தரியைக் காண்பித்தான். 


எதிராளி "செல்லாது செல்லாது" என்று சொல்லி  ஒருமுறை திருப்பி விளையாடக் கேட்கிறான். இந்த முறையும் எதிராளி தோற்க ஜலீல் முன்னேறுகிறான். 


ஜலீல் விதிமுறைகளில் சொன்னபடி கங்காரு ஓட்டம் ஓடாமல் வளையங்களில் வேகமாக ஓடி அடுத்த போட்டியாளரை எதிர்கொள்கிறான். எதிராளி பாறையைக் காண்பித்து இரு விநாடி கழித்து காகிதத்தைக் காண்பிக்கிறான். பாறையைக் காகிதம் மூடி வெல்கிறது. 


இந்த முறை பேரிரைச்சல். "கள்ளாட்டம் கள்ளாட்டம்" என்று ஜலீலை நோக்கி கூட்டம் இரைகிறது. நேராக என்னிடம் மேல்முறையீட்டிற்கு வந்தனர். ஆசிரியைகள் தூரமாக நின்று கதை பேசிக்கொண்டிருந்தனர். "அவன் விளையாடிட்டு போகட்டும். இதப் போய் பெரிசு பண்ணாதீங்க" ன்னு சொல்லி அனுப்பிவைத்தேன். 


அடுத்த சுற்றிலும் இது போன்று ஜலீல் ஜெயிக்க மீண்டும் கூச்சல். அதே முறையீட்டுடன் வந்தனர். "நிறைய நேரங்களில் ஜெயிக்கிறது முக்கியம் கிடையாது. ஒன்றா சண்டை போடாம விளையாடக் கத்துக்கணும். வாழ்க்கையில முக்கியமான குணம். " என்று திருப்ப முயன்றேன். வந்தவர்கள் "இது சரியில்ல. இது சரியில்ல." என்று எனக்கெதிராக கலகம் நடத்த ஆரம்பித்தனர். 


ஜலீல் எதையும் கண்டுகொண்டது போல் தெரியவில்லை. எது நடந்தால் நமக்கென்ன என்று விளையாடும் வாய்ப்புக்காக காத்திருந்த மீதமுள்ளவர்களிடம் விளையாடச் சென்றான். 


கிட்டத்தட்ட இறுதிச்சுற்று. ஏறக்குறைய அனைத்துக் கண்களும் அந்த இரண்டு கரங்களை நோக்கி இருந்தது. இரண்டும்  நடனக்குழுவினர்களின் கரங்களையும் கால்களையும்  போல் ஏக காலத்தில் ஒத்திசைந்து ராக் பேப்பர் சிசர் என முனுமுனுத்துக் கொண்டிருந்தது. இந்த சுற்றை ஜலீல் எந்த விதமான தந்திரமும் இன்றி வென்றான். எனக்கோ நானே வென்றதைப் போன்ற உணர்வு. எதையோ இறக்கிவைத்தது போலிருந்தது. 





பள்ளி வழக்கமான கோலாகலமின்றி முடிந்து கொண்டிருந்தது. மூன்று மாதங்களாக வகுப்புப் பாடங்களும் வீட்டுப்பாடங்களும் வீட்டில்தான் நடந்தது.  பொம்மைகளை குழந்தைகள் கலைத்துப் போட்டதுபோல கொரோனா எல்லாவற்றையும் கலைத்துப் போட்டிருந்தது. புதிய ஒழுங்கு என்ற வார்த்தை பிறந்திருந்தது. கடைசி இரண்டு வாரம் பள்ளியில் நடக்கும் திருவிழாக் கொண்டாட்டங்களும்  30 நிமிடங்களுக்கு சுருக்கப்பட்டிருந்தது. 



ஒரு சாயங்காலம் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பலூன் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஏறிக்கொண்டு ஹார்ன் அமுக்கிக்கொண்டும் விசிலடித்துக் கொண்டும் குடியிருப்பு முழுவதும் அங்குமிங்கும் அலைந்தனர். வீடுகளின் வெளியே மக்கள் வந்து இந்த வருடம் பட்டம் வாங்கும் குடியிருப்பின் மாணவர்களை ஆர்ப்பரித்து வாழ்த்துத் தெரிவித்தனர். 


கவிதாவிடமிருந்தும் செய்தி வந்திருந்தது.  இந்த வாரத்துடன் பள்ளி முடிவதால் வார இறுதியில் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பள்ளி மாணவன் ஒருவனின் அப்பா எர்னெஸ்டோ லொன்டோன்யோ பள்ளியின் மாணவர்கள் அனைவரின் வீட்டு வழியாக ஓடிவர முடிவுசெய்துள்ளார். பெரிய மாரத்தான் ஓட்டம். மாணவர்கள் பள்ளியின் பெயரிட்ட சட்டையை அணிந்தோ ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் பதாகைகளை ஏந்தியோ சாக்பீஸால் முற்றத்தில்  வண்ணச்சித்திரங்களை வரைந்தோ  ஆசிரியர்களையும் எர்னெஸ்டோவையும் கொண்டாடுங்கள் என்று முடித்திருந்தார்.  எர்னெஸ்டோ பற்றிய விவரங்களையும் இணைத்திருந்தார். 




விதுரனிடம் இதுபற்றி சொன்னபோது உற்சாகத்தின் அறிகுறி தெரியவில்லை. ஆலன் லொன்டோன்யோவைத் தெரியுமா என்றவுடன் என் வகுப்பில் தான் படிக்கிறான் என்றான். அவனோட அப்பா தான் ஓடி வர்றாங்க என்றவுடன் கொஞ்சம் ஆர்வத்தை வெளிப்படுத்தினான். 


ஓட்டத்திற்கு முந்திய இரவு மீண்டும் நினைவுபடுத்தி இரண்டு மூன்று அலாரங்களை வைத்து தூங்கச்சென்றேன். 


"ஏய். லேட்டாத் தான் தூங்கப்போறான். காலையில அசந்து தூங்குவான். ஆர்வக்கோளாறுல எழுப்பிக்கிட்டு இருக்காதே. ஒருத்தரும் பிள்ளைய காலங்காத்தால எழுப்பமாட்டாங்க. என்ன மார்க்கா கொடுக்கிறாங்க. லாக்டவுன்ல புள்ளைங்க பத்து மணிக்கு மேல எந்திரிச்சி பழகிடுச்சு. அதுவும் இன்னைக்கு எல்லா வீட்டிலும் லேட்டா உக்காந்து படம் பாத்துருக்கும்ங்க. அமுக்கிக்கிட்டு தூங்கு. "





அலாரம் விழிக்கும் முன் எனக்கு அந்தக்காலையில் முழிப்பு வந்துவிட்டது. அலாரங்களை நிறுத்திவிட்டு பூனை போல் பதுங்கி படுக்கையை விட்டு எழுந்தேன். 

 


மிதிவண்டியை எடுத்து தெருமுனை வரை சென்று பார்த்துவரலாம் என்று கிளம்பினேன். 


எதிர் வரிசையில் உள்ள குஜராத்காரர் வீடு, அடுத்த பெங்களூர்க்காரர் வீடு. அடுத்த இரண்டு வீடு தெலுங்கு. அடுத்த வீடு வட இந்தியா. அடுத்த வீடு மலையாளம். எப்போதோ போட்ட மாவிலைகள் வடக்கு பார்த்த வாசற்களில் காய்ந்து தொங்கிக்கொண்டிருந்தன. 


தெற்கு பார்த்த வீடுகள் உள்ள வரிசையில் கொரியா, சீனா என மாற்றி மாற்றி நான்கு வீடுகள். இரண்டு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். ஒரு ஐரோப்பியக்காரர் வீடு. தெரு  எந்த விதமான ஆர்ப்பாட்டமன்றி இன்னும் தூங்கிக்கொண்டிருந்தது. ஏன்  தெற்கு பார்த்த வீடுகள் மட்டும் இந்தியர்களுக்கு கிடைப்பதில்லை. 




எட்டு மணிக்கு சரியாக இந்தக் குடியிருப்புக்கு வருவதாகச் சொல்லியிருந்தார்களே என்று மீண்டும் கைபேசியைப் பார்த்து தேதியையும் சரிசெய்து கொண்டேன். எல்லா முற்றங்களும் வழக்கமான வெறுமையைக் காண்பித்துகொண்டிருந்தன.   


இன்னும் சிறிது தூரம் சென்று அடுத்த தெருவில் திரும்பியதும் எதிரே ஓரு பலூன்கள் கட்டிய வேன் ஒன்று மெதுவாக வந்துகொண்டிருந்தது. காரை ஒரு நடுத்தர வயது அம்மா ஓட்டி வந்துகொண்டிருந்தாள். காருக்குள் ஒரு சிறுவனும் சிறுமியும் களைத்துப்போய்  உட்கார்ந்திருந்தனர். பலூன்காரில் உட்கார்ந்திருக்கும் உற்சாகம் சிறிதுகூடத் தெரியவில்லை. 


காரின் பின்பகுதியைத் திறந்து வைத்துக்கொண்டு ஒரு இளவயதுக்காரர் காமிரா ஒன்றை சாலையை நோக்கி காண்பித்துக்கொண்டிருந்தார். 


அது பார்த்துக்கொண்டிருந்த இடத்தில் ஒரு சுறா போன்ற உடையை அணிந்திருந்த ஒருவர் ஓடிக்கொண்டிருந்தார். சுறாவின் மேல் ஜாடை பற்கள் அவருக்கு தொப்பியாக இருந்தது. சுறாதான் விதுரன் பள்ளியின் விலங்கு. மாணவர்களுக்கு   ஆசிரியர்கள்  அனுப்பும் கடிதங்களிலும்  செய்தி சொல்லும் பள்ளி வீடியோக்களிலும் மாணவர்களை  சுறாக்களே என்று தான் கூப்பிடுவார்கள். 



சுறா உடையில் ஓடும் அவர்தான் எர்னெஸ்டோ என்பதையும் முன்னால் காரில் செல்வது அவர் குடும்பம் என்பதையும் எளிதாக யூகிக்கமுடிந்தது. அவரிடம் உற்சாகத்துடன் "ஹலோ" என்று  சொல்லி சைக்கிளைத் திருப்பி அவர் செல்லும் திசையிலே வண்டியை நகர்த்த ஆரம்பித்தேன். "ஹலோ எப்படி இருக்கீங்க ' என்று அவர் சொன்ன பதிலில் ஒரு துள்ளல் இருந்தது. காரில் முன் சென்று அவர்கள் குடும்பத்தினரிடம் ஒட்டியிருந்த களைப்பு இவரிடம் துளிக்கூடத் தெரியவில்லை. 



அந்த வெயில்காலக் காலையில் முழு உடலை மறைக்கும் ஆடையை உடுத்தி ஓடுவது என்பது வழக்கத்திற்கு மாறானது தான். வியர்த்து கொட்டும். மேல் சட்டை ஏதும் இல்லாமல் தொடை வரைக்கும் வெறும் ஒரு கால்சட்டை மட்டும் அணிந்து ஓடுபவர்களைத் தான் பார்த்திருக்கிறேன். 


எல்லா வீடுகளும் பூட்டியிருந்தன. தெருக்கள் ஏதும் களைகட்டாமல் காலைச்சோம்பலை முறித்துக்கொண்டிருந்தன. பலூன் கட்டிய கார் கூட உற்சாகமிழந்திருந்தது. எர்னெஸ்டோவின் ஊக்கம் மட்டும் குறைந்திருக்கவில்லை. 















Comments

  1. Fluent, Realistic and Funny. Nice to know your involvement with shcool community. You have documented so much of memorable events of an Indian origin parent with all the small feelings and related questions. The student character Jaleel is so unique and loveable! The father who was running alone has the messgae to us!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உறுபசி

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உறுபசி என்ற நாவல் சம்பத் என்ற கதாபாத்திரத்தை அவர்கள் நண்பர்கள் மூவர் மற்றும் அவர்கள் மனைவி வாயிலாக புரிய முயற்சிப்பதேயாகும்.  நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான குடும்பம், சாதனைகள், சம்பாதித்த பணம் போன்ற விழுமியங்களைக் கருத்தில் கொண்டு ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையை மதிப்பீடு செய்து கடைசியாக வெற்றி அல்லது வீழ்ச்சி என்ற ஒற்றைச் சொல்லில் முடிக்க இயலாது என்ற நிதர்சனத்தை உணரவைப்பது இந்த நாவலின் போக்கு. சம்பத் வாழ்ந்த ஒவ்வொரு தருணமும் ஒரு வண்ணமாக இருப்பதால் மொத்தமாக அவனது வாழ்க்கை ஒரு கலைடாஸ்கோப்.  அவன் இறந்த பிறகு கூடும் அவனது கல்லூரி வகுப்புத்தோழர்கள் அவனைச் சிந்தித்து அவனை வரைய முற்படுகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்காக கையில் பாஸ்போர்ட்டுடன் வரிசையில் நிற்கும் நாம் வரிசையை விட்டு வெளியேவந்து அந்த இடத்தில் களியாட்டம் போடுவதைக் கற்பனை செய்ய முடியுமா? சமூகம் நமது மீது சுமத்தியிருக்கும் மதிப்பீடுகள் நமக்கு லட்சுமண் ரேகா. அதைக் கடப்பதற்கு நமக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பீடுகள் ஒன்றுக்கும் சிக்காமல்

கூரைக் கோழிகள்

“அந்த  கத்தரிப்புக்கலர  எடுங்களேன் . மேல் அடுக்குல  ரெண்டாவது வரிச . அதுக்கு கீழ உள்ளது  “ எனக்கு தூக்கி வாரிப் போட்டது.  தெளிவாக் கேட்க   காதின் மடல்களை விரித்து  துவாரங்களைப்  பெரிதாக்கினேன். “அதுவும், அதே  வரிசல  மேல இருக்குற அந்த மஞ்சக்கலரயும்  எடுத்துடுங்க “ இந்த முறை உறுதி செய்துவிட்டேன் . அவளே தான் .  திரும்பக் கூடாது.  இந்த இடத்தை  விட்டு அசையாம இதே மாதிரி குனிஞ்சே  உக்கார்ந்துருவோம் . “சத்தியத்தைத்  தேடிக்கொண்டு போகிறவனுக்குத்  துக்கத்தின்  பரிசு தான் எப்போதும் கிடைத்திருக்கிறது . புறக்கணிப்புகள் . மன முறிவுகள் . ஓட ஓட விரட்டல் “ னு  உயிரியல் பூங்காவில்  வாசித்த அதே  குரல்.அவள் எப்போதும்  கைப்பையில்  சுந்தர ராமசாமியின் “ ஜே ஜே  சில குறிப்புகள் “  வைத்திருந்த காலம்.  பூங்காவில்  அருகில் உட்கார்ந்து     அவள் கோடு  போட்டு வைத்திருந்த அந்த வரிகளை எனக்காக பலமுறை  வாசித்து காண்பித்து இருக்கிறாள் .    அந்தப் பக்கம் முழுவதும் ஏற்ற  இறக்கத்துடன்   வாசித்து “ கூரைக்  கோழிகள் சிரிக்கக் கூடும் . காகங்கள்  சிரிக்கக்கூடும். சற்றுக் குரூரமான  , கொடுமையான சிரிப்புத்தான்.  அப்போதும் சூரியன