எஸ் ராமகிருஷ்ணனின் தேசாந்திரி படிக்கும் வாய்ப்பு எனக்கு சமீபத்தில் கிடைத்தது. ஆனந்த விகடனில் தொடராக வந்த கட்டுரைகளை விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டு உள்ளனர்.
"உலகம் பெரியது எனினும் உலகை அறிய நினைக்கும் மனித ஆசை அதைவிடப் பெரியது. எல்லா இரவு பகலிலும் யாரோ ஒரு மனிதனின் கால்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. எல்லா பக்கமும் திறந்துகிடக்கிறது உலகம். விருப்பமும் தேடலும் நம்மைக் கொண்டுசெல்ல அனுமதிப்பது மட்டுமே நமது வேலை "
"நீர்வீழ்ச்சியின் முன் நிற்கும்போது ஏற்படும் சிலிர்ப்பும் பிரமாண்டமான அதன் விசையும் , ஈரக்காற்றும் எப்படி நேரில் காணாமல் உணரமுடியதோ , அது போல , இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்யாமல் ஒருவன் இந்தியாவைப் பற்றிய சித்திரத்தை மனதில் உருவாக்கவே முடியாது ".
அவர் அலைந்து திரிந்த நகரங்களில் கண்ட காட்சிகளை , பெற்ற அனுபவங்களை , அனுபவித்த வெம்மையை , குளுமையை நம்மை உணரச் செய்கிறார். அதுவே அவரின் எழுத்தின் பலம்.
கும்பகோணம் , குற்றாலம் , கொடைக்கானல் , சென்னை , தனுஷ்கோடி, சோழமண்டலம் , பழனி என்று நாம் செல்லும் சுற்றுலா இடமாகட்டும் , அர்ச்சுனாபுரம் என்ற கிராமத்தில் உள்ள நல்லதங்காள் கிணறு , திருவக்கரை தேசிய காப்பகம், வெள்ளாம்பி என்னும் ஆதிவாசிகள் வசிக்கும் இடம், கீச்சாங்குப்பம் போன்ற அதிகம் பயணிக்கப்படாத இடமாகட்டும் .. அவர் கண்ட காட்சிகளை நம் கண்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை.
"நான் கண்ட காட்சிகள் எனது விருப்பத்தின் சாட்சிகள். எனது விருப்பம் ஒவ்வொரு நாளும் புதிதாக இருக்கிறது. எனது தேடுதலில் நான் கண்டுகொண்ட ஒரே உண்மை , மனித வாழ்வு மிக விசித்திரமானது என்பதே .."
வெள்ளாம்பி காணிகள் அவரிடம் சொன்னது " நாங்கள் படிக்கவில்லை. அனால் எல்லாவற்றையும் நம்புகிறோம் . நீங்கள் படித்தவர்கள் . ஆனால் எதையும் நம்புவதில்லை . எங்களைக் காப்பாற்றுவது படிப்பறிவு அல்ல, இந்த மலை தான் . உங்களுக்கு மலை பொழுதுபோக்கும் இடம். எங்களுக்கு பிறப்பிடம் . நீங்கள் மலையைப் புரிந்துகொள்வதற்கு இன்னும் நூறு வருடங்கள் ஆகும் ".
"யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான் கணியன் பூங்குன்றன் . அது சந்தேகத்தின் நிழல் விழாத காலம். இன்று நாம் அடையாள அட்டைகளும் கடவுச் சீட்டுகளும் இல்லாமல் பயணிப்பது சாத்தியமில்லை. அலைந்து திரியும் துறவிகளே கூட தங்களுடைய பெயரை உடலில் பச்சை குதிக்கொண்டு அதை அடையாள அட்டைப் போலக் காட்டுகிறபோது , நான் எம்மாத்திரம் சொல்லுங்கள் "...
" கோழிக்குஞ்சுகளுக்குக் கூட நீலம்,மஞ்சள்,சிவப்பு என நிறம் மாற்றி பூசி விற்கத் தொடங்கிவிட்ட வணிக உலகில் கலைகள், சிற்பம், பாரம்பரிய இசை என்று பேசுவது கூட பைத்தியகாரத்தனமானதாக கருதப்படும். ஆனாலும், காலத்தில் நாம் எதையல்லாம் முக்கியம் எனத் தெரியாமல் தூக்கி எறிகிறோமோ, அதையெல்லாம் பின்னாளில் அடைவதற்குப் பெரிய விலை கொடுத்து வருகிறோம் என்பதையே காலம் திரும்பத்திரும்ப நிரூபித்து வருகிறது"
"டீக்கடைகளை விடவும் அதிகமாக பாலர் பள்ளிகள் பெருகிவிட்டன, கோழிப்பண்ணைகளைவிட அதிகமாக பொறியியல் கல்லூரிகள் உருவாகியிருக்கின்றன என்றால், கல்வி வளர்கிறது என்று அதற்கு அர்த்தம் இல்லை. டீக்கடையைவிட,கோழிப்பண்ணையைவிட கல்வி அதிக வருமானம் தரும் வணிகமாகிவிட்டது என்பதே பொருள். நம் கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கொண்டு இருக்கும் இந்தக்கல்விச் சீர்கேடு, நோய்க்கிருமியை விடவும் மிக ஆபத்தானது"
நம் காலத்தில் இவரின் எழுத்தை நாம் படிக்க கிடைத்தது பாக்கியமே . அதை நாம் படிக்காமல் இருப்பது அவருக்கு நாம் செய்யும் இழுக்கே ..
Comments
Post a Comment